மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 6 December 2022

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?

         
         ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.



        உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்றத் தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.


       அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.


       பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.


       ஆனால் கால ஓட்டத்தில் மனிதர்கள் கிரிவலம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மறைந்து போனது. சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் மட்டும் அங்கு அரூப வடிவில் கிரிவலம் மேற்கொண்டு ஈசனின் அருளை பெற்று வந்தனர். இந்த நிலையில் மூவேந்தர்கள் ஆட்சியின்போது கிரிவலத்தின் மகிமையை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பை இந்த உலகுக்கு பெற்று தந்த சிறப்பு ஒரு பாண்டிய மன்னனுக்கு கிடைத்தது.


       அந்த பாண்டிய மன்னனின் பெயர் வஜ்ராங்கதன். ஒரு தடவை அவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். அப்போது அழகான புனுகுப் பூனையை கண்டான். வாசனையோடு திகழ்ந்த அந்த பூனையை பிடிக்க முயற்சி செய்தான். ஆனால் அது அவனிடமிருந்து தப்பி ஓடியது. மன்னன் தனது குதிரையில் விடாமல் விரட்டினான். அந்த பூனையோ அருணாசலம் மலையை அடைந்தது.

          என்றாலும் மன்னன் வஜ்ராங்கதன் தொடர்ந்து பூனையை விரட்டினான். அந்த பூனை திருவண்ணாமலை மலையை கிரிவலம் போல சுற்றி வந்தது. மலையை முழுமையாக சுற்றி முடித்ததும் அந்த பூனை ஒரு இடத்தில் கீழே விழுந்து இறந்தது. அந்த சமயத்தில் மன்னனை சுமந்து வந்த குதிரையும் கீழே விழுந்து உயிரை விட்டது. மன்னன் மட்டும் உயிர் தப்பினான். அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

         குதிரையும், பூனையும் கந்தர்வர்களாக மாறி காட்சி அளித்தனர். அவர்கள் இருவரும் விண்ணுலகம் செல்ல தயார் ஆனார்கள். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன் வஜ்ராங்கதன் அவர்கள் இருவரிடமும், “நீங்கள் யார்? எதற்காக இந்த திருவிளையாடல் நடக்கிறது” என்று கேட்டார். அப்போது அவர்கள் முன் ஜென்மத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்தனர்....


       “நாங்கள் இருவரும் வித்யாதரர்கள். ஒரு தடவை துர்வாச முனிவர் இருந்த வனத்துக்குள் சென்று அங்கிருந்த செடி-கொடிகளை நாங்கள் நாசமாக்கி விட்டோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எங்கள் இருவரையும் பூனையாகவும், குதிரையாகவும் மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். பிறகு அவரே எங்களுக்கு சாப விமோசனத்திற்கான வழியையும் தெரிவித்தார்.


        திருவண்ணாமலைக்கு சென்று வசியுங்கள். ஒரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் வருவான். அவன் மூலம் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நாங்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு வந்து வசித்து வந்தோம். நீங்கள் விரட்டியதால் நாங்கள் சிவபெருமானே மலையாக இருக்கும் இந்த புண்ணிய மலையை கிரிவலமாக வரும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளோம்.


        நீ இந்த மலையை நடந்து வராமல் குதிரையில் வந்ததால் உனக்கு இந்த கிரிவலத்திற்கான பலன் கிடைக்கவில்லை. உனக்கு அனைத்து செல்வமும் முக்தியும் வேண்டுமானால் இந்த மலையை நடந்து கிரிவலம் செய்ய வேண்டும். எங்களுக்கு முக்தி கிடைத்ததால் விடைபெறுகிறோம்” என்று கூறியபடி விண்ணுலகம் சென்று விட்டனர்.


         ஸ்ரீஅதன் பிறகே வஜ்ராங்கதன் மன்னனுக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் ஈசனின் அருளைப் பெற்று அத்தனை சிறப்புகளையும் பெற முடியும் என்ற உண்மை தெரிய வந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் உடனடியாக மன்னர் பதவியில் இருந்து விலகினான். ஆட்சி பொறுப்பை தனது மகன் ரத்னாங்கத பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு திருவண்ணாமலைக்கு வந்து தினமும் கிரிவலம் செய்ய ஆரம்பித்தான். அதோடு நாட்டு மக்களையும் கிரிவலம் செல்ல வைத்தான். அதன் பிறகே திருவண்ணாமலை கிரிவலம் பார் புகழும் வகையில் பரவியது.


        இதற்கிடையே சித்தர் பெருமக்களும் கிரிவலத்தின் சிறப்பை மக்களுக்கு உணர்த்தினார்கள். திருவண்ணாமலை மலை ஜோதி லிங்க வடிவமாகி பிறகு ஸ்ரீ சக்கர வடிவத்தில் அமைந்துள்ள உலகின் உன்னதமான மலை என்பதையும் அதை சுற்றி வந்தால் பிறவி பிணிகள் அனைத்தும் தீரும் என்பதையும் சாதாரண மனிதர்களிடம் சித்தர்கள் தெரிய வைத்தனர். இதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.



        திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று அருணாசல புராணம் உள்பட பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையை சுற்றி நடந்து வந்த சிவந்த பாதங்களை கண்டாலே நாலாவித பாவங்களும் காணாமல் போய்விடும். கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒருவரது உடலில் பட்டாலே அவரை பிடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


        திருவண்ணாமலையில் கிரிவலம் வரவேண்டும் என்று சொன்னாலே போதும்.... பிரம்மஹத்தி தோஷம் தீர்ந்து விடும். ஒரு அடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜ பதவியை பெறக்கூடிய யாகம் செய்த பலன் வரும். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்கும். நான்குஅடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோக பலன்கள் கிடைக்கும்.

        கிரிவலம் வந்து சிவபெருமானிடம் பார்வதிதேவி பலன் பெற்றது ஒரு பவுர்ணமி தினமாகும். எனவே பவுர்ணமியில் கிரிவலம் செல்வது கூடுதல் பலன்களை தருவதாக கருதப்படுகிறது. பொதுவாக திருவண்ணாமலையில் எந்த தினத்திலும் எப்போது வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம். நேரம்-காலம் கிடையாது. நள்ளிரவில் கூட கிரிவலம் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் கிரிவலத்துக்கும் திருவண்ணாமலை மலையானது ஒவ்வொரு விதமாக காட்சி தரும். அதை கிரிவலம் செல்பவர்கள் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

       ஆதி காலத்தில் திருவண்ணாமலையில் வருட பிறப்பு, மாத பிறப்பு, பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். பின்னர் அமாவாசைக்கு கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் சந்திரனின் முழு சக்தியும் பவுர்ணமி தினத்தன்றுதான் வெளிப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்ட பிறகு பவுர்ணமியில் கிரிவலம் செல்வது அதிகரித்துள்ளது. ஆனால் திருவண்ணாமலையை பொறுத்தவரை 24 மணி நேரமும் கிரிவலம் நடக்கிறது. மலையைச் சுற்றி, எப்போதும், யாராவது ஒருவர் கிரிவலம் சென்று கொண்டு இருப்பதை பார்க்கலாம்.


       கிரிவல பாதை மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கம் ஆலயங்கள் உள்பட அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்தபடி வந்தால் கிரிவலத்தை முடிப்பதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகலாம்.


     கிரிவலப் பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் தவிர மடங்கள், ஆசிரமங்கள், தரிசனப் பகுதிகள், சித்தர்களின் ஜீவ சமாதிகள் என பல்வேறு இடங்கள் உள்ளன. அடி அண்ணாமலை, இடுக்குப் பிள்ளையாரும் இருக்கிறார்கள். இப்படி கிரிவலப்பாதையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதாக இருந்தால் குறைந்தது 5 மணி நேரமாகி விடும்.


      அப்படி இல்லாமல் கிரிவலத்தை மட்டும் மேற்கொண்டால் 3 மணி நேரத்தில் கிரிவலத்தை நிறைவு செய்து விடலாம். ஆனால் அதற்காக வேக வேகமாக கிரிவலப் பாதையில் நடக்க கூடாது.

     பஸ்சை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்க பரக்க கிரிவலம் செல்லக்கூடாது. டி.வி. சீரியல் பற்றி பேசிக்கொண்டோ அல்லது ஊரில் யார் குடியைக் கெடுக்கலாம் என்று பேசிக் கொண்டோ அல்லது யார் பற்றியாவது புறம் பேசிக் கொண்டோ கிரிவலம் செல்லக்கூடாது. கிரிவலம் வருவது என்பது சூட்சுமமாக பல நன்மைகளை நமக்கு தரக்கூடியது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


        கிரிவல பாதையில் உள்ள நம் கண்களுக்கு தெரியாத சித்தர்கள் அனைவரும் நம்மை ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை நம்ப வேண்டும். இந்த பலன்களை எல்லாம் பெற வேண்டுமானால் மனம் ஒரே சிந்தனையில் ஈசனை மட்டும் நினைத்தபடி நமசிவாய என்று உதடுகள் உச்சரித்தபடி வேறு எந்த செயல்களிலும் ஈடுபடாமல் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்.

ஓம்... நமசிவாய...

Pages